KILL BILL (கில் பில்):-
கத்தியின்றி, துப்பாக்கியின்றி ரத்தம் வழிய வேண்டுமா? ஹாலிவுட் சூப்பர்
இயக்குனர் என்று வருணிக்கப்படும் குவெண்டின் டேரன்டினோவின் கில் பில் பார்த்தால் போதும். படம் முடியும்போது நிச்சயம் உங்கள் சட்டை முழுவதும் ரத்தம் படிந்திருக்கும். ஏனென்றால் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை, திரை முழுவதும் ரத்தம் தெறித்துக்கொண்டே இருக்கும்.
இயக்குனர் என்று வருணிக்கப்படும் குவெண்டின் டேரன்டினோவின் கில் பில் பார்த்தால் போதும். படம் முடியும்போது நிச்சயம் உங்கள் சட்டை முழுவதும் ரத்தம் படிந்திருக்கும். ஏனென்றால் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை, திரை முழுவதும் ரத்தம் தெறித்துக்கொண்டே இருக்கும்.
டைட்டானிக் படம் பார்த்தால் உடனே யாரையாவது காதலிக்கத் தோன்றும். சைனீஸ் டைப் சண்டை படம் பார்த்தால் உடனே குங்பூ கற்றுக்கொண்டு யாரையாவது அடிக்கத் தோன்றும். இந்த கில் பில் பார்த்தால்… இன்னும் நாம் உயிரோடு இருக்கிறோமா என்று தலையையும் கையையும் தொட்டு உறுதிப்படுத்தவும், கையாலாகாத குற்றவுணர்ச்சியும் தோன்றும்.
ஆரம்பமே அமர்க்களம், அதிரடி என்றெல்லாம் பார்த்திருப்போம். இது ஆரம்பமே உவ்வேக். ரத்தக் கோரமாக சிதைக்கப்பட்ட உமா தர்மன் முகத்தை டிஷ்யூ பேப்பரை வைத்து துடைக்கிறான் பில். நீ என்னை சாடிஸ்ட் என்று தவறாக எண்ணிவிடாதே என்று சமாதானம் சொன்னபடி துப்பாக்கியை எடுக்கிறான். என் வயிற்றில் உன் குழந்தை வளர்கிறது என்று உமா தர்மன் சொல்வதை கண்டுகொள்ளாமல் சுட்டுவிடுகிறான் பில். இது ஒரு பாகமாக சொல்லப்படுகிறது.
திடீரென மஞ்சக்கலர் காரில், மஞ்சக்கலர் டிரஸ் போட்டு ஒரு பெண்ணின் வீட்டுக்கு வருகிறாள் உமா. இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததும் முடியை பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார்கள். அந்த நேரம் பள்ளி பஸ் வந்துவிடவே, அந்தப் பெண்ணின் குட்டிப்பெண் வீட்டுக்குள் நுழைகிறாள். சண்டையினால் அமளிதுமளியாகிக் கிடக்கும் வீட்டைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறாள். சின்னப் பெண்ணின் முன்பு சண்டை போடவேண்டாம் என்று அவள் அறைக்குப் போகும் வரையிலும் காத்திருக்கிறார்கள். அவள் போனதும் உமாவை அந்தப் பெண் கொல்வதற்கு முயல, கத்தியை வீசி அவளை கொன்றுவிடுகிறாள். அதனை குட்டிப்பெண் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இது ஒரு பாகம்.
திருமணம் நடக்க இருந்த நேரத்தில் திடுமென ஏழெட்டு பேரை கொன்று போட்டிருக்கிறது பில்லின் அதிரடி படை. அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று சுற்றிலும் கோடு போட்டு இன்வெஸ்டிகேஷன் செய்யும்போதுதான், மணமகளாக இருக்கும் கர்ப்பிணி பெண் உமா தர்மன் இன்னமும் சாகவில்லை என்று தெரியவருகிறது.
இப்போது உமா தர்மன் ஆஸ்பத்திரியில் நான்கு வருடங்களாக கோமா நிலையில் இருக்கிறாள். அவளை கொல்வதற்கு பில்லின் அடிமை ஒருத்தி வருகிறாள். துர்மனை கொலைசெய்ய முயற்சிக்கும் நேரம், பில் போன் செய்து தடுத்து நிறுத்துகிறான். இந்த நேரத்தில் அவளை கொன்றுவிட்டால் நிம்மதியாக செத்துவிடுவாள். அதற்கு நாம் அவளை அனுமதிக்கக்கூடாது. அவள் திரும்பி எழுந்துவரட்டும், ரசித்து ருசித்து கொலை செய்வோம் என்கிறான். இது ஒரு பாகம்.
நான்கு ஆண்டுகள் கழித்து கோமா நிலையில் இருந்து கண் விழித்து எழுகிறாள் உமா தர்மன். தலையில் குண்டு துளைத்த இடத்தில் இரும்பு பிளேட் வைத்திருப்பது தெரிகிறது. யாரோ வரும் சத்தம் கேட்க… விழிப்பு வராதவள் போல் அமைதியாக படுத்துக்கொள்கிறாள். ஒரு மனிதனை உள்ளே அனுப்பும் ஆஸ்பத்திரி வார்டுபாய், உன்னுடைய இஷ்டம் போல் அவளை அனுபவித்துக்கொள் என்று அனுப்பி வைக்கிறான். இத்தனை அழகியான ஒருத்தியை (உமா தர்மனை அழகி என்று சொன்னதற்காகவே இவனை கொலை செய்யலாம்) அனுபவிக்கப் போகிறேன் என்று உமாவின் முகத்திற்கு அருகே செல்ல, படக்கென்று எழுந்து அவன் உதட்டையும் நாக்கையும் கடித்துத்துப்பி, கழுத்தையும் கடித்து தன்னையும் அவனையும் ரத்தாபிஷேகம் செய்து கொலை செய்கிறாள். அடுத்து உள்ளே வந்து எட்டிப்பார்க்கும் வார்டுபாயை, கதவு இடுக்கில் அடித்து அடித்து நசுக்கியே கொலை செய்கிறாள். இது ஒரு பாகம்.
தன்னை கொலை செய்த பில் மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த நான்கு பேரையும் பழிவாங்க வேண்டும் என்று கிளம்புகிறாள் உமா. சைனாவுக்குச் சென்று ஒரு மாதம் தங்கியிருந்து அபாரமான ஒரு கத்தியை வாங்கிக்கொள்கிறாள். ஜப்பானுக்குச் சென்று அங்கே இருக்கும் ஓ-ரென் இஷ்லியை (லூசி லியு) கொல்வதற்கு ஒற்றை மனுஷியாக கிளம்புகிறாள்.
இந்தப் படத்தில் ஒரே ஒரு அழகு தேவதையாக வரும் ஷோபியின் (ஜூலி டிரஃபஸ்) கையை தோள்பட்டைக்குக் கீழே வெட்டி எறிந்து ஆட்டத்தை தொடங்கிவைக்கிறார். ஒற்றைக் கையில் இருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தம் கூரையைத் தொடுகிறது. அதன்பிறகு தங்கள் தலைவி ஓ-ரென்னை காப்பாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான அடிமைகள் வந்து, அத்தனை பேரும் வெட்டுப்பட்டு ரத்தம் ரத்தமாக சிந்துகிறார்கள். இந்த சண்டையில் ஏகப்பட்ட தலைகள் உருளுகின்றன, கைகள் வெட்டப்படுகின்றன, கண்கள் சிதறுகின்றன, ரத்தம் நீருற்று போல் பீய்ச்சி பீய்ச்சி அடிக்கிறது. அதாவது கொலை செய்வதை கலை போல் காட்டியிருக்கிறாராம். ஒரு வழியாக அத்தனை பேரையும் கொன்றுவிட்டு ஓ-ரென்னுடன் சண்டை போடுகிறாள்.
மற்றவர்களை கொன்றுவிட்டதைப் போல் அவளையும் கொன்றுவிட்டால் அத்தனை நன்றாக இருக்காதே… அதனால் அவள் தலையை மூளை வெளியே தெரியும் அளவுக்கு மட்டும் வெட்டி எறிகிறாள். நுங்கு எடுப்பதற்காக பனங்காயை சீவியது போல் மூளை வெளியே தெரிவதை அழகியல் காட்சியாக தந்து ரசிக்க வைக்கிறார். இது ஒரு பாகம்.
சுருக்கமாகவும் இந்தப் படத்தின் கதையை சொல்லலாம். பில்லின் கூட்டாளியாக பணிபுரிந்து அவன் காதலியாக மாறியவள் உமா தர்மன். திடீரென நல்லவளாக மாறி அதாவது பழைய வாழ்க்கையில் இருந்து வெளீயேறி வேறு ஒருவனுடன் திருமணம் முடிக்க இருக்கும் நேரத்தில், அத்தனை பேரையும் சுட்டுப் போடுகிறான் பில். அப்போது கோமாவில் விழுந்துவிட்ட உமா தர்மன், விழிப்பு வந்ததும் அத்தனை பேரையும் பழிவாங்க முடிவெடுக்கிறாள். இதனை எப்படி முடிக்கிறாள் என்பதைத்தான் தனக்கேயுரிய கொடூர புத்தியுடனுடன் குண்டக்கமண்டக்க நான்லீனியர் திரைக்கதை உத்தியைக் காட்டியும் இயக்கியிருக்கிறார் குவெண்டின்.
இந்தப் படத்தை யாரும் பார்க்காமல் இருப்பது நலம். அப்படி பார்த்தே தீரவேண்டும் என்றால் குழந்தைகளுக்குத் தெரியாமல் பார்க்கவும். ஏனென்றால் இந்தப் படத்தில் தெறிக்கும் ரத்தத்தைப் பார்த்து, குழந்தைகளுக்கும் ரத்தம் பார்க்கும் ஆசை வரலாம். தூங்கும்போது உங்கள் கழுத்தை அறுத்து ரசிக்கலாம்.
ஒரே பாகமாக எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்ட கில் பில், நான்கு மணி நேரத்தைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்டது. அதனால் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டது. முதல் பாகம் 2003-ம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2004-ம் ஆண்டும் வெளியானது. மக்கள் மனதில் வன்முறையும் ரத்தத்தைப் பார்க்கும் ஆவலும் பெருகிவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, இரண்டு படமும் ஹிட்.