My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Saturday, November 21, 2015

ஒரு நதியின் படுகொலை

Print Friendly and PDF

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*
சமீபத்தில் சேலத்துக்கு சென்றபோது சாக்கடை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகளில் இருந்து மலத்தை நேரடியாக சாக்கடையில் விட்டிருந்தார்கள். தூரத்தில் நின்றபோதே துர்நாற்றம் தூக்கியது. சாக்கடையின் கரை ஓரத்தில் வீற்றி ருக்கிறது சேலம் பெரிய மாரியம்மன் கோயில். நினைவுகள் பின்னோக்கிச் சுழல்கின்றன.

புவியியல் அமைப்பின்படி மலைகள் மடியில் வைத்து தாலாட்டும் பள்ளத்தாக்கு... சேலம் மாவட்டம். இயற்கையின் செல்லப்பிள்ளை அது. சேலத்தின் வரலாற்றுப் பெயர் சைலம். சைலம் என்றால் மலைகள் சூழ்ந்தப் பகுதி என்று அர்த்தம். 

வடமேற்கில் இருந்து வடகிழக்கு வரை சேர்வராயன் மலை நீள்கிறது. ஆத்தூர் முதல் விழுப்புரம் வரை அதன் வாலைப் பிடித்து வளர்கிறது கல்வராயன் மலை. தெற்கில் ஜருகு மலை, ஊத்து மலை, நாமமலை, கந்தகிரி மலை இருக்கின்றன. வடக்கில் நகர மலை, பெருமாள் மலைகள் விரிகின்றன. ராசிபுரம் தாண்டிச் சென்றால் கொஞ்சி அழைக்கிறது கொல்லி மலை. இவை எல்லாம் கிழக்குத் தொடர்ச்சி மலைகள். சேலத்தின் நீராதாரம் இந்த மலைகள்தான். 

ஒருகாலத்தில் இந்த மலைகளில் ஆயிரக்கணக்கான அரு விகள் இருந்தன.
சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடிய தண்ணீர் திருமணி முத்தாறாக உற்பத்தியாகி சேலம் மாவட்டத்தில் இருந்த தொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி, காவிரியுடன் கலந்தது. தஞ்சாவூர் நெல்லுக்கு வளம் சேர்த்த பெருமை சேலத்தின் தண்ணீருக்கும் இருக்கிறது. மொரப்பூரில் ஓடும் பொன்னையாறும் ஓமலூர் அருகே ஓடும் சர்பந்தா நதியும் சேர்வராயன் மலை கொடுத்த கொடைகள்தான். 

இவை தவிர, கல்வராயன் மலையில் இருந்து வசிஷ்ட நதியும் கொல்லி மலையில் இருந்து சுவேதா நதியும் உற்பத்தியாகின. ஒருகாலத்தில் சுற்றிலும் பச்சைப் பசேல் மலைகளுடனும் நடுவே ஐந்து ஆறுகளுடன் கூடிய பசுமைப் பள்ளத்தாக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துப் பாருங்கள்!

திருமணிமுத்தாறு தொன்மையான நதி. மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்றெல்லாம் அது அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்துச் சிப்பிகள் இருந்தன; முத்து எடுக்கப்பட்டது என்பது மக்களின் நம்பிக்கை. பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக் கப்பட்டது என்பார்கள். அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றைக்கும்கூட அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது. 

சேலம் ஸ்தல புராணத்தில் பாடப்பட்ட பாடல் ஒன்று,
‘சேலம் மணிமுத்தா நதியின்
ஒரு திவலை நீர் உண்டால்
உடல் பாதகங்கள் அகலும்
பரம ஞானம் உண்டாகும்’
என்கிறது.

சேர்வராயன் மலையின் தெற்கில் ஏற்காடு அருகே பிறக்கிறது திருமணி முத்தாறு. அது சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 75 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. அன்றைய திருமணிமுத்தாற்றில் குகை வாய்க்கால், பஞ்சந்தாங்கி ஏரி வாய்க்கால், சக்கிலி ஏரி வாய்க்கால், மூக்கனேரி வாய்க்கால், தாதுபாய்க்குட்டை வாய்க் கால், நோட்டக்காரன் வாய்க்கால், வெள்ளக்குட்டை வாய்க்கால், சீலாவரி வாய்க்கால் என எட்டு வாய்க்கால்கள் இருந்தன. 

நகரமலை ஆறு, போதமலை ஆறு, அறுநூத்துமலை ஆறு, ஜருகுமலை ஆறு, கஞ்சமலை ஆறு, கொள்ளை ஆறு என ஆறு துணை ஆறுகள் இருந்தன. திருமணிமுத்தாற்றின் வடிநிலப்பரப்பு 717 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. ஆற்றில் பல்வேறு காலகட்டங்களில் 25 அணைகள் கட்டப்பட்டன. 290 சங்கிலித் தொடர் ஏரிகளை திருமணிமுத்தாறு நிரப்பியது. 

1889-ம் ஆண்டில் இந்த நீர் நிலைகளை மேம்படுத்த ரூ. 1,07,568 ஒதுக்கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் ஆங்கிலேயரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. இன்றளவும் அங்கே அள்ள அள்ளக் குறையாமல் இரும்பு, மேக்னசைட், குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒருகாலத்தில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது எனச் சொல்கிறாகள். திருமணிமுத்தாற்று நீர் வளத்தால் கரும்பு, பருத்தி விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். 

சேலம், உப்பம், லாடம் போன்ற பருத்தி வகைகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. இங்கு நெய்த பருத்தி ஆடைகள் மற்றும் குளிர்கால ஜமுக்காளங்கள் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ராசிபுரம் வெல்லமும் நெய்யும் இலங்கைக்குச் சென்றன. வாழ்வாங்கு வாழ்ந்தது திரு மணிமுத்தாற்றின் நதிக்கரை நாகரீகம்.

மக்களை வாழ்வாங்கு வாழ்வித்த அந்த ஆறு இன்று இல்லை. நிகழ் காலத்தில் கண்முன்னே துள்ளத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டது அது. இதுவரை வெளியே சொல்லப்படாத சோகக் கதை அது. ஆரம்பத்தில் நதியில் சாக்கடையைக் கலந்தார்கள். வழியின்றி ஏற்றுக்கொண்டது நதி. 

ஆனால், அதன் பின்பு 2000-களின் தொடக்கத்தில் தீட்டப்பட்டது ஒரு படு கொலைத் திட்டம். அந்தப் படு கொலைக்கு ‘திருமணிமுத்தாறு அபிவி ருத்தித் திட்டம்’ என்று பெயர் வைத்தார்கள்.
கொலையைத் தொடங்கும் முன்பாக ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டி பூமி பூஜை செய்தார்கள். எல்லோரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். முதலில் நதிக்கு ஒன்றும் புரியவில்லை. தொடங்கியது கொலை. முதலில் கரைகள் எங்கும் சிமெண்ட் கலவையைப் பூசினார்கள். பின்பு அணைமேடு தொடங்கி கொண் டலாம்பட்டி வரை நதியின் படுகை யெங்கும் கான்கிரீட் கலவையை அடைத்தார்கள்.

மண்ணுக்கும் நதிக்கும் இருந்த நரம்பு வெட்டி எறியப்பட்டது. மூச்சுவிட வழியில்லாமல் முனகித் துடித்தது நதி. வாயிருந்தால் கதறியிருக்கும் அது. உலகில் எங்கேனும் இதுபோல கொடுமை நடந்தது உண்டா? இது நடந்தபோது மக்கள் மகிழ்ச்சிப் பொங்க கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்த்ததுதான் வேதனை. சூழலியாளர்கள்கூட குரல் கொடுக்கவில்லை. 

அரசியல்வாதிகள் ஊர்தோறும் இந்தப் படுகொலை யைப் பற்றிப் பெருமையாக பறைச்சாற் றினார்கள். தான் பெற்றெடுத்தப் பிள்ளைகளே தனக்கு உயிரோடு சமாதி கட்டியது கண்டு வேதனை தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்தது நதி. 

முன்பு சாக்கடை ஓடினாலும் மழைக் காலத்தில் ஆற்றில் பெருகிய நீரால் சேலத்தின் நிலத்தடி நீர் வளம் நன்றாக இருந்தது. நதியைப் புதைத்தப் பின்பு சுற்றுவட்டாரங்களின் நிலத்தடி நீரும் வற்றிப்போனது. தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள் மக்கள். இப்போது பார்க்க சகிக்கவில்லை அந்த பெரிய சாக்கடையை.

மரணித்தது நதி மட்டும்தானா? அது உருவாக்கிய ஏரிகளும்தான்!

நன்றி : ஹிந்து

Friday, November 6, 2015

BLACK TIGER

Print Friendly and PDF

ரவீந்தர் கௌஷிக்... 

இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை என்றே சொல்லலாம்..நாடகங்களில் நடித்துகொண்டு இருந்த மனிதரை, அவருடைய திறமையை அடையாளம் கண்டு பிடித்து உளவுத்துறைக்கு கொண்டு வந்தது ரிசர்ச் அனலிசிஸ் விங் என்று சொல்லப்படும் ரா.....1975 ல் இவர் ரா வில் சேர்ந்தார்.. நிற்க..
2001ல் பாகிஸ்தானில் நபி அஹெமத் என்பவர் இருதயம் மற்றும் நுரையீரல் நோயால் அவதிப்பட்டு மரணம் அடைந்தார்.. ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு தனது தாயாருக்கு வழக்கம் போல சேர வேண்டிய கடிதங்கள் அனைத்தையும் ரகசியமாக கொண்டு சேர்த்தார்.. அதை தானே அவர் அவருடைய 30 ஆண்டு காலமாக செய்து கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தையே கலங்க அடித்தார்..
ரவீந்தர் கௌஷிக் என்கிற நபி அஹெமத்..... இந்திய உளவுத்துறை கண்டு எடுத்த தலை சிறந்த உளவாளி...பாகிஸ்தான் ரானுவதிற்குள்ளேயே புகுந்து ஒரு முக்கிய பதவியும் அடைந்த மாமனிதர்.. இன்றும் இவரை பற்றி ரா வில் சேர விரும்பும் உளவாளிகள், இவருடைய அபரிமிதமான சாகசங்களை கேட்டு மெய் சிலிர்ப்பது நிஜம்.தன்னுடைய 23 வது வயதில் ரா வினால் தேர்வு செய்யப்பட்டு, தெள்ள தெளிவாக உருது பாஷையை கற்றுக்கொண்டு, குரானை புரட்டி படித்து, சுன்னத் செய்து கொண்டு ஒரு முழு இஸ்லாமியனாகவே மாறி, பாகிஸ்தானில் உள்ள இண்டு இடுக்கு எல்லாம் மனப்பாடம் செய்து, பாகிஸ்தானில் நுழைந்தார்.. இவர் இந்தியன் என்று சம்பந்தப்பட்ட அத்துணை ரகார்டுகளும் இங்கு இந்தியாவில் அழிக்கப்பட்டது.. ஒரு வேளை இந்த உளவாளிகள் மாட்டிகொண்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் கையை விரித்து விடும்.. இது உலகம் முழுதும் கடைபிடிக்க படும் நடவடிக்கை..
1975ல் பாகிஸ்தானில் சட்டக் கல்லூரியில் பட்டம் படிக்க அடியெடுத்து வைத்த இந்த மனிதருக்கு ராணுவத்தில் சேர அருமையான அடிகோலாக அமைந்தது..பாகிஸ்தானில் ராணுவத்தில் சேர்ந்த கொஞ்ச வருடங்களிலேயே மேஜர் பதவிக்கு வந்தார் என்றால் இந்த மனிதரின் அசாத்திய துணிச்சல் மற்றும் அறிவை என்னவென்று சொல்லி வியப்பது..?அமானத் என்கிற இஸ்லாமிய பெண்ணை திருமணமும் செய்து இஸ்லாத்தையும் தழுவி, ஒரு நிஜ பாகிஸ்தானியாகவே மாறி விட்டார்.. 1975 முதல் 1983 வரை இந்திய ராணுவத்திற்கு தேவைப்பட்ட அத்துணை ரகசியங்களும் இவரால் பரிமாறப்பட்டன..அவை எல்லாம் கிடைத்த காரணத்தால் எண்ணில் அடங்காத நாசகார பாகிஸ்தானின் முயற்சிகள் இந்திய ராணுவத்தினரால் தடுக்கப்பட்டன..இவரின் அபார திறமையை கண்டு ராணுவத்தினர் மட்டும் என்றி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களும் மெய்சிலிர்த்தார். அவருக்கு இந்திரா காந்தி BLACK TIGER என்கிற பட்ட பெயரும் சூட்டினார்...
இதற்கு நடுவில் இந்திய உளவு துறை அடுத்து இன்யத் மைஷா என்கிற ஒருவரை அதே பாகிஸ்தானுக்கு 1983ல் அனுப்பியது.. எப்படியோ தன்னுடைய ராணுவத்தில் ஒரு உளவாளி வந்துவிட்டதை தெரிந்து கொண்ட பாகிஸ்தான், இந்த மனிதரை பிடித்து விட்டது.. சும்மா விடுமா.. யார் உள்ளே புகுந்தார் என்று தெரிந்து கொள்ள இவரை சித்திரவதை செய்து விஷயத்தை கறக்க என்னன்னவோ செய்தது..கடைசியில் தெரிந்தும் கொண்டது.. இது நாள் வரை யார் ராணுவ மேஜர் ஆக இருந்தாரோ இவர் ஒரு இந்திய உளவுத்துறையின் ஆள் என்று தெரிந்த பாகிஸ்தான் ராணுவம் திகில் அடைந்து, அவரை 2 வருடங்கள் சித்திரவதை செய்து, பின்னர் சிறையில் அடைத்து, அவருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்ற முடிவு செய்தது.. இது நடந்த வருடம், 1985... ஆனால் கடைசியில் அவருடைய தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக பாகிஸ்தான் உச்ச நீதி மன்றத்தால் மாற்றப்பட்டது.
கௌஷிக் கிட்டத்தட்ட 16 வருடங்கள் தன்னுடைய தாய் நாட்டிற்காக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.. மிகவும் மோசமான அந்த சிறை வாசத்தால் அவருக்கு TB , ஆஸ்துமா வியாதிகள் தொற்றிக்கொண்டன..கடைசியில் மீளவே முடியாமல் வீர மரணத்தை முல்தானில் உள்ள மத்திய சிறையில் அடைந்தார்.. அங்கேயே அவரை புதைக்கவும் செய்தனர்..
இந்திய உளவுத்துறை இவரை போன்ற ஒரு மாவீரனை இன்று வரை கண்டெடுக்க வில்லை.. எந்த வித பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் தேசத்துக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணம் செய்த இவரை நினைத்து இன்றும் ரா அமைப்பினர் பெருமை படுவர்.. இவரை போன்றவர்கள் பொது மக்களால் அறியப்படுவது இல்லை.. முடியவும் முடியாது.. உளவின் சிறப்பே தன்னை யாரும் அறியக்கூடாது என்பது தான்..போற்றுதலுக்கு உரிய இந்த மனிதரை வணங்குவோம்..
சல்மான் கான் நடித்து பெரும் அளவில் வெற்றி பெற்ற படம் ஏக் தா டைகர்.. இவரை மனதில் வைத்து தான் அந்த டைட்டில்..

Wednesday, November 4, 2015

கலங்கரை கலக்கம்


Print Friendly and PDF



ஆதி கால கலங்கரை கோபுரங்களின் உச்சியில், கப்பல்களுக்கு துறைமுகத்தை அடையாளம் காட்டும்விதமாக மகர ஜோதி போல நெருப்பை எரிய விட்டிருக்கிறார்கள். சரி உலகின் முதல் கலங்கரை விளக்கம் எது? கிமு 280ல் அலெக்ஸாண்ட்ரியாவில் கட்டப்பட்ட பரோஸ் லைட்-ஹவுஸ். இருபது ஆண்டுகள் முயற்சியில் கட்டப்பட்ட இது, பழங்கால உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று. இதன் உயரம் 370 அடி. எகிப்தின் அரசர் தலாமி தான் உருவாக்கிய அலெக்ஸாண்ட்ரியா என்ற துறைமுக நகரத்தை ஒட்டியமைந்த ஒரு சிறு தீவில் இதனை உருவாக்கினார். தலாமி வேறு யாருமல்ல மாவீரன் அலெக்ஸாண்டரின் முக்கியத் தளபதி. பேரரசி கிளியோபாட்ராவின் பாட்டன்களின் ஒருவர்.

இப்போது இருக்கும் உலகின் பெரும்பான்மையான லைட்-ஹவுஸ்களின் வயது நூற்றுக்கும் மேல். எத்தனையோ கப்பல்களையும் உயிர்களையும் ஆபத்திலிருந்து கரை சேர்த்த கடவுள் அவை. விளக்கணைந்த பொழுதுகளில் கடலுக்கு பல உயிர்களை பலிகொடுத்த சாத்தான்களும் அவையே. குட்டித் தீவுகளில் கெட்டியாக நிற்கும் ஒற்றை லைட் ஹவுஸின் தனிமையில் ஏராளமான மர்மங்கள் உண்டு. எதனால்?

ஆளில்லா கடற்கரைப் பகுதிகளிலும், தனித் தீவுகளிலும் அமைந்த லைட் ஹவுஸகளைப் பராமரிப்பதற்காகப் பணியாளர்கள் நியமிக்கபட்டிருந்தார்கள். சில லைட் ஹவுஸ்களில் தனியே ஒரே ஒரு பணியாளர் மட்டும் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தவமிருப்பார். ஏதாவது கப்பல்கள் கடந்து சென்றால் மனித முகத்தை பார்க்கலாம். சில இடங்களில் கடற்கொள்ளையர்கள் வந்து லைட் ஹவுஸைச் சேதப்படுத்திவிட்டு, பணியாளரின் உயிரை எடுத்துப் போவதுண்டு. புயல்,மழை சூறாவளிகளில் சிக்கி இறப்பவர்களும் உண்டு. லைட் ஹவுஸைப் பராமரிக்கும் போது அதற்கு பெயிண்ட் அடிக்கும்போது தவறிக் கீழே விழுந்து இறந்த பணியாளர்கள் அதிகம். தனிமையின் துயரம் தாளமல், விரக்தியில் உயரத்தில் இருந்து கீழே குதித்து உயிரை விட்டவர்களும் உண்டு.

செத்துப்போனவர்களுக்கு பிரச்னையில்லை. அடுத்து அதே லைட் ஹவுஸூக்குப் பணியாளராக நியமிக்கப்படும் நபருக்குத்தான் ஆயுள் தண்டனை. செத்துப்போன பழைய ஆள், ஆவியாக அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதாகத் தோன்றும். யாரும் இல்லாமலேயே யாரோ உடனிருப்பதாகத் தோன்றும். கடல் உறங்கும் சமயத்தில் இரவுகளில் எழும் அமானுஷ்ய சப்தங்கள் உயிரைக் குடிப்பதாக அமையும். இம்மாதிரி பயத்தில் செத்துப் போன பணியாளர்களின் நிஜக்கதைகளும் கொட்டி கிடக்கின்றன.

அமெரிக்காவில் Massachusetts பகுதியில் பிளைமெளத் விரிகுடாவில் 1769 ஒரு லைட் ஹவுஸ் கட்டப்பட்டது. இரண்டு கோபுரங்கள் கொண்ட அதனை அண்ணன் ஜானும் தங்கை ஹன்னாவும் பராமரித்தாரகள். ஒரு போரில் கலந்து கொள்ளச் சென்ற ஜான் கொல்லப்பட்டார்.முதல் பெண் லைட் ஹவுஸ் பராமரிப்பாளராக ஹன்னா அதனை பல வருடங்கள் பராமரித்து வந்தார். காலப்போக்கில் பலவித மாற்றங்களை கண்ட அந்த கோபுரங்களில் ஒன்று 1924ல் இடிக்கப்பட்டது. 1986 ல் தானியங்கி லைட் ஹவுஸாக மாற்றப்பட யாரும் அதில் தங்குவதில்லை.

லைட் ஹவுஸ்களைத் தேடி சென்று புகைப்படம் எடுக்கும் லூயிஸ் தன் மனைவியுடன் பிளைமெளத்துக்கு சென்று ஓரிரவு தங்கினார். இரவில் விழித்த அவர் நடுநடுங்கிப் போனார். பதினெட்டாம் நூற்றாண்டு உடையில் ஒரு பெண்ணின் அரூபமான உருவம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. பயத்தில் அவர் அலற மனைவியும் பதறி எழ அந்த உருவம் அப்படியே காற்றில் கலந்தது. பின் லூயிஸ் விடுத்த ஸ்டேட்மெண்ட் அது நிச்சயம் ஹன்னாவாகத்தான் இருக்கக்கூடும் அவள் அந்த லைட் ஹவுஸை விடுவதாக இல்லை.

பூத்பே துறைமுகத்திலிருந்து பத்து மைல்கள் தொலைவிலுள்ள ஸீகுன் maine தீவில் ஒரு லைட் ஹவுஸ் கட்டப்பட்டிருந்தது. குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால், யாரும் அங்கு சென்றுவர இயலாது. 1850 இருக்கலாம். அப்போது அங்கே பணி நியமனம் செய்யப்பட்டிருந்த ஒருவர், திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்குச் செல்வதுபோல தன் மனைவியுடன் லைட் ஹவுஸூக்கு சென்று குடியேறினார். யாருமில்லாத தனிமை. பரவசமான பொழுதுகள்.

எல்லாம் சில நாள்களிலேயே வெறுத்துவிட்டது. அந்த மனைவி பொழுதுபோகமல் தவித்தாள். கணவன் அவளுக்காகவே பியானோ ஒன்றை வரவழைத்தான். என்ன பியானாவோடு ஒரே ஒரு பாடலுக்கான நோட்ஸ் மட்டும்தான் வந்தது. பொழுது போகத போதெல்லாம் அந்த ஒரே பாடலையே மீண்டும் மீண்டும் வாசித்தாள். தினமும் அதே பாடல். பியோனோவின் சத்தம் கேட்டாலே கணவனுக்கு கோபம் வர ஆரம்பித்தது.

நிறுத்தப் போகிறாயா இல்லையா....

அவள் காதில் வாங்கவில்லை. கணவன் ஒரு கோடாரியை எடுத்தான். பியானோ மீது பாய்ச்சினான். அந்த செயலை பொருக்க முடியாத மனைவி குறுக்கே பாய்ந்தாள். கோபம் தணிந்து கணவன் தன்னிலைக்குத் திரும்பியபைாது, இரண்டு உடல்கள் அங்கே கிடந்தன, மனைவியும் பியானேவும்.

தன் தவறை உணர்ந்த அந்தக் கணவன் லைட் ஹவுஸின் உச்சத்தில் ஏறி நின்றான். தன் நெஞ்சில் கோடாரியைச் செலுத்தினான். அவன் உடல் அப்படியே தரையே நோக்கி...

இன்றைக்கும் அந்த பியானோவின் இசை எப்போதாவது ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் ஸீகுன் லைட் ஹவுஸைச் சுற்றிப் பார்க்க செல்பவர்கள்.