டயானா,கென்னடி போன்றோரின் மரணங்களுக்கு இணையான மர்மம் உடையது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம்,அவர் உண்மையில் இறந்தாரா,இல்லை அவ்வாறு நம்ப வைக்க உண்டாக்கிய சூழ்ச்சியா?,சூழ்ச்சிக்கான காரணம் என்ன?பிண்ணணியில் உள்ள அரசியல் சதுரங்க ஆட்டம் என்ன? போன்றவற்றை இத்தொடரில் விரிவாக காண்போம்.
சுதந்திரம் கிடைக்கும் முன் சிங்கப்பூர் சென்றார் நேதாஜி,சிங்கப்பூரில் இருந்து பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்ட நேதாஜி, பாங்காக்கில் இருந்து வியட்நாமில் உள்ள சைகோனுக்கு ராணுவ தளபதிகளுடன் சென்றார்.
சைகோன் விமான தளத்தில் ஜப்பான் போர் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்தது, கடைசி நேரத்தில் விமானத்தில் ஒருவருக்கு மட்டுமே இடம் உள்ளது என்று ஜப்பான் அதிகாரிகள் கூறினர்.
உடனே செல்லவா? வேண்டாமா? என்று யோசித்த நேதாஜி, அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் எந்நேரமும் சைகோனை கைப்பற்றலாம் என்று இருந்ததால் விமானத்தில் செல்வது என்று முடிவு செய்தார்.
கடைசி நேரத்தில் மற்றொருவர் வரலாம் என்று அதிகாரிகள் கூறியதால் தன்னுடன் ஹபிப்-வுர்-ரஹ்மான் அவர்களையும் அழைத்து கொண்டு விமானத்தில் ஏற அங்கிருந்த மற்றவர்களை பார்த்து நேதாஜி 'ஜெய்ஹிந்த் ' என்று கூற விமானம் புறப்பட்டது.
சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானது என்றும் அதில் நேதாஜி இறந்து விட்டதாகவும் ஜப்பான் அரசு அறிவித்தது.
ஆனால் நேதாஜியை தப்பிக்க வைக்க ஜப்பான் போட்ட திட்டம் தான் அது, உண்மையில் அப்படி ஒரு விபத்து நடந்திருக்க வாய்ப்பு இல்லை.
1945 ஆகஸ்ட் 18 ம் தேதி தைபேய் விமான நிலையத்திலோ, அதன் அருகிலோ எந்த விமான விபத்தும் நடக்கவில்லை என்று தைவான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜப்பான் கோவில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள சாம்பல் மற்றும் எலும்புகளை டி என் ஏ பரிசோதனை நடத்த விடாமல் தடுத்து விட்டது இந்திய அரசு.
முகர்ஜி கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்று அளித்த அறிக்கையை எவ்வித காரணமும் கூறாமல் இந்திய அரசு நிராகரித்து விட்டது.
பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாக முகர்ஜி கமிஷன் சுட்டிக் காட்டியிருந்தது.
பிரிட்டனில் 25.10.1945ஆம் நாள் பிரதமர் கிளமண்ட அட்லீ தலைமையில் நடந்த காபினட் கூட்டம் வரலாற்றில் மிக முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வு.
அந்தக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரிட்டிஷ் அரசே பதிப்பித்த ஆட்சி மாற்றம் என்ற நூலில் இந்தியாவில் ஒரே எதிரியாகப் போஸ் வருணிக்கப்பட்டார். அவரைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து என்ன தண்டனை அளிப்பது என அமைச்சரவை விவாதித்துள்ளது.
ஆக போஸ் இறந்து விட்டது உண்மையாக இருக்குமானால் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு மாதம் கழித்து பிரிட்டிஷ் அரசின் அமைச்சரவை போஸைக் கைது செய்வது பற்றி எப்படி விவாதித்திருக்க முடியும்?
பிரிட்டிஷ் – இந்திய அரசு பிரிட்டனில் உள்ள அரசுக்கு 23.10.1945 ஆம் நாள் அனுப்பிய கடிதத்தில் போஸைக் கைது செய்தால் நாடே கொந்தளிக்கும் “அவர் எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்.அவரை சரண் அடைய வற்புறுத்தாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தது.
நேதாஜியுடன் பயணம் செய்து உயிரிழந்ததாக கூறப்பட்ட கிமுரா என்ற ராணுவ தளபதி ஒரு மாதம் கழித்து சிங்கப்பூரில் சரணாகதி பத்திரத்தில் கையெழுத்து இட்டவர், உயிரிழந்ததாக கூறப்பட்டவர் எப்படி வந்தாரோ அதே போல தான் நேதாஜியின் மரண செய்தியும்.
1946 மார்ச் லாகூரில் உள்ள ட்ரிபியூன் என்ற பத்திரிகையில் சிங்கப்பூர் வீழ்ச்சியின் போது நகரசபை இன்ஜினியராக இருந்த திரு நாயர் கூறிய செய்தியை வெளியிட்டு இருந்தது அதில் "நேதாஜி சென்ற விமானம் மறுநாள் ஹாங்காங்கில் எவ்வித சேதமும் இல்லாமல் இருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
1946 ல் ஷா நவாஸ் கான் மற்றும் சைகாலும் திரு காந்தி அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது நீங்கள் நேதாஜி பற்றி எத்தகைய செய்திகளை கூறினாலும் நேதாஜி இறக்கவில்லை என்பது தான் எனது தீர்மானம் என்று கூறியிருந்தார்.
ஷா நவாஸ் கான் விசாரணையை ஏற்க முடியாது என்றும் ஷா நவாஸ் கான் ஜப்பானை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜப்பான் இந்தியர்கள் போராட்டம் நடத்தி இருந்தனர், காரணம் ஷா நவாஸ் கான் கமிஷன் சுதந்திரமாக செயல்படாமல் நேருவின் கீழ் இயங்கியது, உண்மைகளை வெளியிடாமல் மறைக்க நினைத்தது அந்த கமிஷன்.
நேதாஜியின் மிக நெருங்கிய நண்பரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1949 ஜனவரி 23 ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் பொதுகூட்டத்தில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் தனக்கும் நேதாஜிக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது என்றும் உறுதிபட தெரிவித்தார்.
1950 ல் இந்தியாவில் இருந்து தலைமறைவான தேவர் ஒராண்டு கழித்து மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தார், மீண்டும் 1951 ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில் நேதாஜி நலமாக இருக்கிறார், அவரை சந்தித்து விட்டு வந்தேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சில ஆண்டுகள் கழித்து பர்மா சென்று திரும்பும் வழியில் கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேவர் நேதாஜி உயிருடன் இருக்கிறார், நேதாஜி உயிருடன் இருப்பது நேரு மற்றும் அவரது சகோதரி ரஷ்ய தூதரான விஜயலட்சுமி பண்டிட் அவர்களுக்கும் தெரியும், தங்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் மௌனம் காக்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தார் .